மின்துறை அமைச்சர் தங்கமணி இல்லத்தில் தமிழக அமைச்சர்கள் திங்கள்கிழமை இரவு திடீரென ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் பிரமாண பத்திரங்களைச் சேகரிப்பது, எத்தனை பிரமாணப் பத்திரங்கள் வரப்பெற்றுள்ளன என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இரண்டாவதாக, கட்சியை ஒற்றுமையுடன் வழிநடத்திச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இரு அணிகளும் இணைவதற்கு பேச்சு நடத்தத் தயார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்கது. கட்சியும் ஆட்சியும் நிலைத்திருக்க வேண்டும். நீடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது கோரிக்கை தொடர்பாக ஆலோசித்தோம் என்றார்.
இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா ராஜிநாமா செய்துள்ளதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், அந்தத் தகவலில் உண்மையில்லை என்றார்.