விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதல்ல என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில் விதிக்கப்பட்ட 15 நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருடைய நீதிமன்றத் காவலை வரும் 27-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்திலிருந்து வெளியே அழைத்துவரப்பட்ட வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
விவசாயிகள் போராட்டத்தை, மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதல்ல. விவசாயிகளை பிரதமர் மோடி சந்தித்து, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
மேக்கேதாட்டு விவகாரத்தில் கர்நாடகத்துக்குச் சாதகமாகவும் தமிழகத்துக்குப் பாதகமாகவும் மத்திய அரசு செயல்படுகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை, தமிழகத்துக்குள் கொண்டுவர விட மாட்டோம். மதுவுக்கு எதிராகப் போராடிய பெண்ணைத் தாக்கிய காவல்துறை அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை?
விவசாயிகளின் பிரச்னைகளுக்காக திமுக அனைத்துக் கட்சித் கூட்டத்தைத் கூட்டி, 25-ஆம் தேதி முழு கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. மதிமுகவைப் பொருத்த வரை, இந்த போராட்டத்துக்கு ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை என்றார் அவர். வைகோவைப் பார்க்க மதிமுக தொண்டர்கள் எழும்பூர் நீதிமன்ற வளாகத்துக்குள் குவிந்தனர். அவர்களிடம் சற்று நேரம் உரையாடிய வைகோ, மீண்டும் சிறை செல்வதற்காக வாகனத்தில் ஏறியபோது கண் கலங்கினார்.