சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என தமிழிசை பந்தயம் கட்டியுள்ளதாக அம்மா அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
சென்னையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காகவே வாழ்ந்த சசிகலா தற்போது சிறையில் இருக்கும் போது, அவரது குடும்பத்துக்கு எதிராக சதி செய்வது நியாயமல்ல என்று தெரிவித்தார்.
மேலும், எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என்று பந்தயம் கட்டியுள்ளார். அதிமுகவினர் பெரும்பான்மையோடு இருக்கும் போது எப்படி ஆட்சியைக் கலைக்க முடியும் என்று நண்பர் கேட்டதற்கு, ஆட்சியை கவிழ்த்துக் காட்டுவதாக பந்தயம் கட்டியுள்ளார்.
இந்தியா முழுவதும் அவர்கள் கொடி பறக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், தமிழகம் காலம் காலமாக தனித் தீவாக இருந்து வருகிறது. இது பெரியாரின் கோவில், அண்ணாவின் நந்தவனம், எம்ஜிஆரின் தோட்டம், ஜெயலலிதாவின் கோட்டை. இங்கு வகுப்புவாத சக்திகள் தலை தூக்க முடியாது. இங்கு நடப்பது ஒரு கலாச்சார யுத்தம். இந்த யுத்தத்தில் டிடிவி தினகரன் தலைமை தாங்கிய அணியே வெற்றி பெறும்.
மத்தியில் ஆளும் பாஜக, அதிமுக அரசுக்கு எதிராக வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் என எல்லா சக்திகளையும் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிவித்தார் நாஞ்சில் சம்பத்.
அதிமுக கட்சி அலுவலகத்தில் தினகரனை அனுமதிக்கமாட்டோம்: அமைச்சர் சி.வி. சண்முகம்
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தி பாஜக: மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர்: டிடிவி தினகரன் பேட்டி
அதிமுகவின் திசையை தீர்மானிக்க காலம் தந்த தலைவன் டி.டி.வி.தினகரன்: நாஞ்சில் சம்பத்