பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி அடைக்கப்பட்டனர்.
சசிகலாவும், இளவரசியும் மகளிர் மத்திய சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இளவரசிக்கு நீரழிவு நோயும், ரத்த கொதிப்பும் இருந்தது. இந்த நிலையில், தற்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, பெங்களூர் சிறையில் பணியாற்றும் மருத்துவர் இளவரசிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்.
இந்த நிலையில், இளவரசியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும், உடல் பரிசோதனை செய்து கொள்ளவும் அனுமதிக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனுவை பரிசீலித்த கர்நாடக சிறைத் துறை டிஐஜி, இளவரசிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவரிடமும் ஆலோசனை நடத்தினார்.
பிறகு அவர் கூறுகையில், இளவரசியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க முடியாது. மற்ற கைதிகளைப் போலவே, அவரும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும். ஒரு வேளை அவரது நோய்க்கு அங்கு சிகிச்சை தர முடியாமல், அங்குள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்தால், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படலாம். தற்போதைக்கு தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெற முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இளவரசிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடவும், இளவரசியின் குடும்பத்தினர் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.