அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள சுமார் 1,400 பணியிடங்களை நிரப்பக் கோரி மருந்தாளுநர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் 500 பேர் வரை கலந்து கொண்டனர். இதுதொடர்பாக போராட்டத்தில் பங்கேற்றோர் கூறியது:
தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு கழக மருத்துவமனைகள், மருத்துவக் கல்வி இயக்ககம், பொது சுகாதாரத் துறை, ஊரக நலப்பணிகள் இயக்ககம் ஆகியவற்றில் சுமார் 1,400 மருந்தாளுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் தற்போது பணியாற்றும் மருந்தாளுநர்களுக்கு அதிக வேலைப்பளு ஏற்படுகிறது. எனவே, காலிப்பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.
எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் 25 -ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர் அவர்கள்.