மதுரையில் காதல் திருமணம் செய்த பெண்ணின் கர்ப்பத்தை கலைக்குமாறு மிரட்டல் விடுத்த கணவர் உள்பட குடும்பத்தினர் மீது அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்வரி(28). இவருக்கும் மதுரை கீழப்பனங்காடியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக பழகி வந்தனராம். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மதுரைக்கு வந்த ராஜேஷ்வரியை, மணிகண்டன் தனது வீட்டில் தங்க வைத்தாராம்.
பின்னர் வீட்டினர் சம்மதத்துடன் ராஜேஷ்வரியை, தல்லாகுளம் பெருமாள் கோயிலில் மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டாராம். பனங்காடியில் உள்ள வீட்டில் இருவரும் 15 நாள்கள் வாழ்ந்த நிலையில், தனிக்குடித்தனம் செல்வதற்காக வீடு பார்த்தபின்பு அழைப்பதாகக்கூறி ராஜேஷ்வரியை சென்னைக்கு அனுப்பி வைத்தனராம். இதற்கிடையில் ராஜேஷ்வரி கர்ப்பமான நிலையில், கணவர் மணிகண்டனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்று மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டல் விடுத்தனராம்.
இதுதொடர்பாக ராஜேஷ்வரி அளித்தப் புகாரின்பேரில் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸார், கணவர் மணிகண்டன்(26), தாய் ஜெயராணி(50), தந்தை ராஜா(53) உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.