அங்கீகாரமில்லா வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்ய மீண்டும் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

அங்கீகாரமில்லா வீட்டு மனைகளை பத்திரப்பதிவு, மறு பதிவு செய்ய மீண்டும் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
அங்கீகாரமில்லா வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்ய மீண்டும் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

அங்கீகாரமில்லா வீட்டு மனைகளை பத்திரப்பதிவு, மறு பதிவு செய்ய மீண்டும் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி விவசாய விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர். எனவே, விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என, வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு, விளை நிலங்களை வீட்டுமனைகளாக 'லே-அவுட்' போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டடத்தையோ பத்திரப்பதிவுத் துறையினர் எந்தவித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது என, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தடை விதித்தது. இந்தத் தடை உத்தரவை நீக்கக்கோரி, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2016 அக்டோபர் 20 -ஆம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனைக்காக பதிவு செய்ய எந்தத் தடையும் இல்லை. அதே நேரம் அந்த தேதிக்குப் பிறகு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற நிலங்களை எக்காரணம் கொண்டும் மறுவிற்பனை செய்து பத்திரங்களை பதிவு செய்யக் கூடாது.
இருப்பினும் அரசு புதிதாக வகுக்கும் கொள்கை முடிவைப் பொருத்தே இதுதொடர்பாக இறுதி முடிவு செய்ய முடியும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துகுமாரசாமி, 'அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக வரைவு விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு விட்டன. இந்த வரைவு விதிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன், விதிகள் குறித்த அறிவிக்கை வெளியிடப்படும்' என்றார்.
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது ஆஜரான மனுதாரர் யானை ராஜேந்திரன், கடந்த ஆண்டு செப்டம்பர் 9 -ஆம் தேதி அங்கீகாரமில்லா விளை நிலங்கள், மனைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்பும் 4 லட்சம் பத்திரப் பதிவுகள் நடந்துள்ளன. இந்த முறைகேடு குறித்து அறிய முயன்ற பத்திரப்பதிவு ஐஜி, வேறு துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து, அரசு அறிக்கை அளிப்பதுடன் தடைக்குப் பின்பும் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது குறித்த விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அங்கீகாரமில்லா வீட்டு மனைகள், கட்டடங்களை பத்திரப்பதிவு செய்ய கடந்தாண்டு செப்டம்பர் 9 -ஆம் தேதி இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர், ஏதாவது பத்திரப்பதிவு நடந்துள்ளதா என்பது குறித்து அரசு அறிக்கை அளிக்க வேண்டும். அவ்வாறு பத்திரப் பதிவுகள் நடைபெற்று இருந்தால் அது செல்லாது.
அங்கீகாரமற்ற நிலங்கள், வீட்டுமனைகளை பத்திரப் பதிவு, மறு பத்திரப்பதிவு செய்ய மீண்டும் தடை விதிக்கிறோம். வெள்ளிக்கிழமை முதல் மூன்று வாரங்கள் அல்லது மறு உத்தரவு வரும் வரை இந்த தடை செயல்பாட்டில் இருக்கும்.
அடுத்த கட்ட வழக்கு விசாரணை கோடை விடுமுறையின் சிறப்பு அமர்வில் (மே 4 அல்லது 5-ஆம் தேதி) நடைபெறும் எனக் கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com