சென்னை : அதிமுகவில் விரைவில் நல்லதே நடக்கும் என்று மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அதிமுக தொண்டர்கள், மக்களின் உணர்வு, எண்ணம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. விரைவில் நல்லதே நடக்கும். நல்ல செய்தி வரும் என தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நிபந்தனைகளைத் தெரிவிப்பது சரியாக இருக்காது. இரு அணிகள் இணைவது குறித்து விரைவில் நல்லது நடக்கும் என்று
ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.
இணைப்புப் பற்றி பேச்சு நடத்த அதிமுகவின் இரு அணிகளிலும் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி (அதிமுக அம்மா அணி) சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமையில் அவருடன் சேர்த்து அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம், கே.சி.வீரமணி ஆகியோர் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.
அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் அவரையும் சேர்த்து பேச்சுவார்த்தைக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.பொன்னையன், நத்தம் விசுவநாதன், மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் மாஃபா. க. பாண்டியராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் இடம் பெற்றுள்ளனர்.
மேலே குறிப்பிட்ட ஏழு பேரும் அதிமுக அம்மா அணி சார்பில் வைத்திலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட 8 பேர் குழுவினருடன் இரு அணிகளும் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது.