பவானிசாகர் நீர்த்தேக்கப் பகுதியில் சேற்றில் சிக்கிய யானையை வனத்துறையினர் மீட்டு, மீண்டும் பவானிசாகர் வனத்துக்குள் வெள்ளிக்கிழமை விடுவித்தனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனச்சரகம், விளாமுண்டி வனப் பகுதியிலிருந்து நீர் அருந்துவதற்காக பவானிசாகர் நீர்த்தேக்கப் பகுதி, நடுமேடு பகுதிக்கு யானைக் கூட்டம் வெள்ளிக்கிழமை வந்துள்ளது. அப்போது, 15 வயதுள்ள பெண் யானை சேற்றில் சிக்கிவிட்டது. அதனுடன் வந்த யானைகள் சிறிது நேரம் அந்த யானையை மீட்க முயற்சி செய்தன. மீட்க முடியாததால், சேற்றில் சிக்கியிருந்த யானையின் குட்டியுடன் திரும்ப வனப் பகுதிக்குள் சென்றுவிட்டன.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் அளித்த தகவலையடுத்து, பவானிசாகர் வனச்சரக அலுவலர் தலைமையில் பவானிசாகர் வனப் பணியாளர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சுமார் 30 பேர், சிறுமுகை வனச் சரகத்தைச் சேர்ந்த வனப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களின் உதவியுடன் பெல்ட், கயிறு உதவியுடன் பெண் யானையை சேற்றிலிருந்து மேலே இழுத்தனர். அப்போது, மிகுந்த சோர்வாக காணப்பட்ட அந்த யானை எழ முடியாமல் மீண்டும் படுத்துவிட்டது.
தொடர்ந்து, யானையின் உடல் வெப்பத்தை சீராக்க அதன் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. இதையடுத்து, யானை எழுந்து நின்றது. சிறுது நேரத்துக்குப் பின்னர், பவானி ஆற்றைக் கடந்து வனப் பகுதிக்குள் சென்றது.