திண்டுக்கல் அருகே நூற்பாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
திண்டுக்கல் அடுத்துள்ள சீலப்பாடி பகுதியில் தனியார் நூற்பு ஆலை செயல்பட்டு வருகிறது. பஞ்சிலிருந்து நூல் நூற்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், மின் கசிவு காரணமாக அந்த ஆலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், வேடசந்தூர் தீயணைப்பு வீரர்களையும் வரவழைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில், ஆலைக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துவிட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.