திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே முறையூர் கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய புதிய ஸ்மார்ட் கார்டில் பயனாளி ஒருவருக்கு மலேசியா நாட்டு முகவரி இடம்பெற்றதால் அந்த பயனாளி அதிர்ச்சி அடைந்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே முறையூர் கிராமத்தைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகள் சமீபத்தில் வழங்கப்பட்டது.
அப்போது, சுரேஷ் என்ற பயனாளிக்கு வழங்கப்பட்ட புதிய ஸ்மார் கார்டில், அவரது கிராம முகவரியில், சுரேஷ், இராமசாமிகுருக்கள், 36, கோலாலம்பூர், மலைசியா என்று அச்சிடப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம சென்று தெரிவித்தார்.
அதிகாரிகள் வாங்கி பார்த்துவிட்டு சிறு புன்னகையுடன் மாற்றம் செய்துதருவதாக கூறினார்.
சம்மந்தப்பட்ட பணியில் ஈடுபட்டு நபர்கள் செய்யும் அலட்சிய போக்கினால், பயனாளிகள் தங்களது புதிய ஸ்மார்ட் கார்டில் உள்ள பிழை திருத்தம் செய்யவும், குடும்ப உறுப்பினர்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம், நியாய விலைக் கடை மாற்றம் ஆகியவற்றுக்கும் பொதுமக்கள் பொதுச் சேவை மையங்கள் முன்பு நாண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பயனாளியின் புதிய ஸ்மார்ட் கார்டில் மலேசிய நாட்டு முகவரி இடம்பெற்ற விவகாரத்தை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.