திமுக உள்பட அனைத்துக் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை (ஏப்.25) நடத்தப்படும் முழு கடையடைப்பால் விவசாயிகளுக்கு எவ்விதப் பலனும் ஏற்படாது என பாமக நிறுவனர் ச.ராமதாஸ் கூறினார்.
இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட உழவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க மறுப்பதைக் கண்டித்து கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுவது அரசியல் அடையாளம் தேடும் நடவடிக்கையே தவிர விவசாயிகளைக் காப்பதற்கான முயற்சி அல்ல.
பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், ஜப்தி நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கும், உயிரிழந்த உழவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உழவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது.
ஆனால், எந்த அடிப்படையில் உழவர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், முழு அடைப்புப் போராட்டத்தையும் திமுக நடத்துகிறது என்பது புரியவில்லை. காவிரிப் பிரச்னைக்குக் காரணமே திமுகதான். 1924-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட காவிரி நீர்ப்பகிர்வு ஒப்பந்தத்தை 1974-ஆம் ஆண்டு புதுப்பிக்கத் தவறியதும், 1970-ம் ஆண்டுகளில் காவிரி துணை நதிகளின் குறுக்கே கபிணி, ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட 4 அணைகளை கர்நாடக அரசு கட்டியதைத் தடுக்கத் தவறியதும் திமுக அரசு தமிழக விவசாயிகளுக்கு செய்த துரோகங்களுக்கு உதாரணம். விவசாயிகளின் கோரிக்கைக்கான அனைத்து அறவழிப் போராட்டங்களையும் பா.ம.க. ஆதரிக்கிறது. மாறாக பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயனற்ற போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பது, அரசியல் அணி திரட்டும் முயற்சியே தவிர, விவசாயிகளின் நலன் சார்ந்தது அல்ல. எனவே, இந்தப் போராட்டத்தில் பாமக பங்கேற்காது.