ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நெடுவாசலில் 12-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், தரையில் மண்டியிட்டு திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
மத்திய, மாநில அமைச்சர்களின் உறுதியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது.
இதையடுத்து, நெடுவாசலில் கடந்த 12-ஆம் தேதி அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டம் 12-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது. போராட்டத்தில், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பியவாறு, சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் தரையில் மண்டியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.