சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மறு உத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 31-ஆம் தேதி உத்தரவிட்டது.
அதன்படி, தமிழகத்தில் நெடுஞ்சாலைகளையொட்டி இருந்த சுமார் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த கடைகளை வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதற்கு வழி செய்யும் வகையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை மாநகராட்சி, நகராட்சி வசம் எடுத்துக் கொள்ள தீர்மானத்தை இயற்றி, அதை ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு, நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் மூலம் 21-ஆம் தேதியிட்டு சுற்றறிக்கை ஒன்று வெளியானது.
இந்த தகவல் சமூகவலைத்தளங்களில்வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிகையை எதிர்த்து , திமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பின் வருமாறு:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மறு உத்தரவு வரும் வரை ஜுலை 10-ஆம் தேதி வரை திறக்கக் கூடாது. மாநில அரசு சுற்றரிக்கையின் படி நெடுஞ்சாலைகளை மாநில அரசு மாற்றிக் கொள்ள தடை எதுவும் இல்லை. ஆனால் அங்கே மூடப்பட்ட கடைகளை மீண்டும் திறக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்காததால் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பிக்கிறது.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.