புதுதில்லி: இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் தரகர் சுகேஷ் இடையேயான தொலைபேசி உரையாடலுக்கான ஆதாரங்களை தில்லி மாநிலக்காவல்துறை சமர்ப்பித்துள்ளது.
அதிமுகவின் சின்னம் முடக்கப்பட்டுள்ள நிலையில் சசிகலா அணிக்கு சாதகமாக இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதற்காக, தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி அளவுக்கு லஞ்சம் அளிக்க முயன்றதாக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்மீது தில்லி காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் இதில் விசாரணை நடத்திய காவல் துறை, தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகர என்னும் தரகரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.
இந்நிலையில் டி.டி.வி.தினகரனுக்கு சம்மன் அனுப்பியதின் பேரில் கடந்த மூன்று நாடகளாக அவர் தில்லி காவல்துறையில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். கடந்த மூன்று நாட்களில் மொத்தமாக 30 மணி நேரத்திற்கு மேலாக தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்காவது நாளாக இன்று மாலை 5 மணிக்குஅவரிடம் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
இந்நிலையில் டி.டி.வி.தினகரன் மற்றும் தரகர் சுகேஷ் இடையேயான தொலைபேசி உரையாடலுக்கான ஆதாரங்களை தில்லி மாநிலக்காவல்துறை நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், விசாரணைக்கு ஏதுவாக சுகேஷுக்குமேலும் 5 நாட்கள் காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.