புதுதில்லி: இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக நேற்று கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணையின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்இன்று தில்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், அவரது நெருங்கிய நண்பரும் பெங்களூரைச் சேர்ந்தவருமான மல்லிகார்ஜுன் ஆகிய இருவரும் தில்லி காவல்துறையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (ஏப் 25) கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் இன்று மதியம் தில்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நீதிபதி பூனம் சவுத்திரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடந்த நான்கு நாட்களாக நடந்த விசாரணையின் பொழுது தினகரன் தனியறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
தொடர்ந்து தில்லி காவல்துறை சார்பில் தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனன் ஆகிய இருவரையும் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரத்தில் வழக்கில் தங்களை ஜாமீனில் விடுவிக்குமாறு தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் தினகரனுக்கு நான்கு நாட்கள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவைத்தது. அவர் விசாரணைக்கு கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லபப்டுவார் என்று தெரிகிறது.