டிடிவி தினகரன் கைது செய்யப்பட்ட வழக்கில் வேறு யார் எல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறிய விசாரணையை விரிவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
ராமதாஸ்: இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கு உள்ள தொடர்புகளையும், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு உள்ள தொடர்புகளையும் அறிய விசாரணை வளையத்தை தில்லி காவல்துறை விரிவுபடுத்த வேண்டும். தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்றிருப்பதால், அதிமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்து, இரட்டை இலைச் சின்னத்தையும் நிரந்தரமாக முடக்க வேண்டும்.
ஜி.கே.வாசன்: இந்த வழக்கைப் பொருத்தவரை வெளிவராத மேலும் பல தகவல்கள் உள்ளதால், உடனடியாக உண்மை நிலையை வெளிக்கொண்டு வரவேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்று தர வேண்டும்.