சென்னை: இரட்டை இலைச் சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் திடீர் திருப்பமாக, சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப் பணித் துறை அதிகாரியிடம் தில்லி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், பண மோசடிக்கு உதவியதாக இடைத்தரகர் நரேஷ் என்பவரையும் தில்லி காவல்துறை இன்று கைது செய்துள்ளது.
டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜுன் ஆகியோர் நேற்று தில்லியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டனர், பிறகு, தினகரன் அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவரிடமும், அவரது மனைவியிடமும் விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், தில்லி காவல்துறையினர் இன்று காலை சென்னை ஆதம்பாக்கத்துக்கு வந்தனர். ஆதம்பாக்கம் காவல்துறை உதவியுடன், அங்கு ஒரு முக்கிய நபரின் வீட்டை தேடினார்கள். ஆனால், அவர்கள், தினகரனையும் மல்லிகார்ஜுனாவையும் உடன் அழைத்து வரவில்லை.
அதில், மன்னார்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப் பணித் துறை அதிகாரி மோகன் என்பவருக்கும், இந்த வழக்குக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் தில்லி போலிசார் விசாரணை நடத்தி வருவதாக அங்கிருந்து வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், முன்னாள் பொதுப் பணித்துறை அதிகாரி மோகன் வீட்டை கண்டறிந்த தில்லி காவல்துறை, அவரது வீட்டுக்குள் சென்று மோகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.