தமிழகத்தில், அகதிகள் முகாம்களில் வசித்து வந்த 46 அகதிகள், மறுவாழ்வுக்காக திருச்சி வழியாக வியாழக்கிழமை இலங்கை புறப்பட்டுச் சென்றனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது அகதிகளாக இந்தியா வந்த லட்சக்கணக்கானோர், பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றனர். அவர்கள் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஹை - கமிஷனர் ஆணையம் செய்து வருகிறது. அந்த வகையில் ஏராளமானோர் இதுவரையில் தமிழகத்திலிருந்து இலங்கை அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை திருச்சியிலிருந்து ஸ்ரீலங்கன் விமானம் மூலம் 46 அகதிகள் மறுவாழ்வு பெறும் வகையில் இலங்கையில் ஏற்கெனவே அவர்கள் வசித்த பகுதிகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இதில், திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டை அகதிகள் முகாமைச் சேர்ந்த ரா. ரவிக்குமார் மற்றும் குடும்பத்தினர் 4 பேர், ஈரோடு பவானிசாகர் முகாமிலிருந்து நா. சண்முகப்பிரியன் (23), புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை அகதிகள் முகாமைச் சேர்ந்த நா. சுதாகரன் மற்றும், ஐ. சௌந்தரராஜ் (34) குடும்பத்தினர் 7 பேர், புதுக்கோட்டை அழியாநிலை முகாமைச் சேர்ந்த
ய. ரூபகாந்தினி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர், நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த சுரேஷ் அவரது மனைவி கோமதி, திருப்பூர் மாவட்டம் பெருமா நல்லூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த 3 பேர், சிவகங்கை மாவட்டம் மூங்கிலூரணி முகாமைச் சேர்ந்த 5 பேர் உள்பட 16 ஆண்கள், 21 பெண்கள், 5 சிறுவர்கள், 4 சிறுமிகள் உள்பட 46 பேர் இலங்கை புறப்பட்டுச் சென்றனர்.
அப்போது, அகதிகள் பிரிவு தனி வட்டாட்சியர்கள் மற்றும் அகதிகளுக்கான ஹை கமிஷனர் அலுவலக அலுவலர்கள், கியூ பிராஞ்ச் அதிகாரிகள், உளவுத்துறையினர் உடனிருந்தனர்.