குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்க முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
திருச்சி: எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்க முடியாது. தமிழக மக்களும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
திருச்சியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு யார் யார் பணம் பட்டுவாடா செய்தார்கள் என்ற பட்டியல் வெளியானது. இந்த பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 6 அமைச்சர்கள் பெயர் இருந்தும் இதுவரை விசாரணை இல்லை. அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, உடனடியாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசின் ஆட்சிக்காலம் 4 ஆண்டுகள் இருப்பதால், இன்னும் 4 ஆண்டுகள் பதவியி்ல் இருக்க வேண்டும் என்பது இரண்டு தரப்பின் எண்ணம். இதுவரை அடித்த கொள்ளை போதாது. இன்னும் 4 ஆண்டுகாலம் கொள்ளையடிக்க வேண்டும் என்பதால் எப்படியாவது ஒரு ரூபத்தில் ஒன்றாகத்தான் இருப்பார்கள்.
புறவாசல் வழியாக தமிழகத்தில் கால் ஊன்ற வேண்டும் என்று முயற்சிப்பது பாஜக என்பதுதான் எல்லோருக்கும் தெரியும். இதை ஸ்டாலின்தான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்க முடியாது. தமிழக மக்களும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
கொடநாடு சம்பவங்கள் பேய்கதை போல உள்ளன. கொடநாடு எஸ்டேட் காவலாளி கொல்லப்படுவது, ஜெயலலிதாவின் ஓட்டுநர் கொல்லப்பட்டிருக்கிறார். கொடநாடு சம்பவத்தில் பல மர்மங்கள் உள்ளன. போலீஸார் கண்டிப்பாக விசாரணை நடத்தி மர்மம் என்ன என்பதை கண்டறிந்து அவற்றை வெளிகொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.