சேலம்: கட்சி இணைப்பில் வேண்டுமென்றே திட்டமிட்டு பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
சேலம் மாநகர மாவட்ட அதிமுக கட்சி வளர்ச்சி பணி குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில், தமிழகத்தில் சந்தர்ப்பவாதிகள் ஏதாவது சொல்லி இந்த ஆட்சியை முடக்க பார்க்கின்றனர். இதற்கு தக்க பாடம் புகட்டுவோம்.
கட்சியும், ஆட்சியும் நம்மிடத்தில் உள்ளது. 90 சதவீத தலைமை நிர்வாகிகள் நம்மிடத்தில் உள்ளனர்.
50 மாவட்டங்களில் 48 மாவட்ட செயலாளர்கள் நம்மிடத்தில் தான் உள்ளனர். 123 பேர் நமக்கு ஆதரவாக உள்ளனர். 37 மக்களவை எம்.பி-க்களில், 29 பேரும், மாநிலங்களவை எம்.பி.க்களில் 12 பேரில் 9 பேரும் நம்மிடத்தில் உள்ளனர்.
ஆட்சியும், கட்சியும் நம்மிடம் உள்ளது. நமது குறிக்கோள் திமுகவை வீழ்த்த வேண்டும். இதற்கு ஒற்றுமையோடு, ஒருமனதாக இருக்க வேண்டும்.
அதிமுகவில் இருந்து பிரிந்த சென்ற அணியினர் முதலில் நிபந்தனையற்ற பேச்சு நடத்தலாம் என கூறினர். ஆனால் அப்படியே அந்தர் பல்டி அடித்து, அந்த அணியினர் சிலர் நிபந்தனை விதித்து பேசி வருகின்றனர்.
பேச்சுவார்த்தையை திட்டமிட்டு வேண்டுமென்றே முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். ஆனாலும் கட்சி பலமாக உள்ளது.
திமுக, பிரிந்து சென்ற அணியினரின் ஆட்சி அமைக்கும் கனவு ஒரு போதும் பலிக்காது. கானல் நீராகத் தான் அமையும்.
நான் கட்சியில் அடிமட்ட தொண்டனாக இருந்து முதல்வர் பதவிக்கு வந்துள்ளேன் என்றார்.