பெரம்பலூரில் சத்துணவில் கெட்டுப்போன முட்டைகளைக் குழந்தைகளுக்கு வழங்கியது குறித்து நடிகர் கமல் ஹாசன் புகார் கூறியுள்ளார்.
தனது நற்பணி மன்றங்களைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசின் ஊழல்கள் குறித்து அமைச்சர்களுக்கு விவரங்களை அனுப்ப வேண்டும் என்று என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கமல் குறித்து தமிழக அமைச்சர்களும் பல்வேறு விமர்சனங்களைக் கூறிவருகிறார்கள்.
இந்நிலையில் ஜூலை 24 அன்று பெரம்பலூர் அங்கன்வாடி மையத்தில் கமல் ஹாசன் ரசிகர்கள் ஆய்வு நடத்தினார்கள். ஆய்வில் குழந்தைகளுக்குக் கெட்டுப்போன முட்டைகளை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கெட்டுப்போன முட்டைகளை வழங்கியதைச் சுட்டிக்காட்டி ட்விட்டரில் கமல் கூறியதாவது:
பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல், இயக்கத்துக்குப் பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது என்று கூறியுள்ளார்.