சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி, டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களின் 'திடீர்' சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் விரைவில் தான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாகவும், அது தொடர்பான பொறுப்பு ஒரு தொண்டனாகவும், துணை பொதுச் செயலாளராகவும் தனக்கு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
அதேநேரம் அதிமுக அம்மா அணி கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் கட்சியின் தலைமை அலுவலகத்தில்,முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை முக்கியமான ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில்தான் அதற்கு முன்னதாக இன்று நண்பகல் தலைமைச் செயலகத்தில் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட எட்டு அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலசோனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களான எம்.எல்.ஏ தானாக தமிழ்செல்வன் மற்றும் தில்லிக்கான மேலிடப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகிய இருவரும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசி வருகின்றனர்.