உயர்நீதிமன்ற உத்தரவை மீறி யார் செயல்பட்டாலும் அவர்கள் தண்டிக்கப்படுவர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் எச்சரித்துள்ளது.
தனியார் பால் நிறுவனங்களில் ரசாயனம் கலக்கப்படுவதாக தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த மே 24ம் தேதி குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக ஆதாரமின்றி தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதாக தனியார் பால் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆதாரமின்றி தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேசக் கூடாது என்றும், மேலும் இதுதொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் அண்மையில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அப்போது பதில் அறிக்கை தாக்கல் செய்ய பால் நிறுவனங்கள் சார்பாக அவகாசம் கோரப்பட்டதால், வழக்கு விசாரணை ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி அமைச்சரின் வழக்கறிஞர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியதாக பால் நிறுவனங்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவை மீறி யார் செயல்பட்டாலும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.