ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க சட்டத்தில் இடமிருப்பதாக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு பரோல் வழங்க வேண்டுமென பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான கோரிக்கை மனுவையும் அவர் அரசுக்கு அனுப்பியுள்ளார்.
இந்தப் பிரச்னை குறித்து சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போது, பதிலளித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பரோல் விவகாரம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், பேரறிவாளனின் பரோல் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பேரறிவாளனை பரோலில் விடுவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. அது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். விரைவில் அறிவிப்பு வரும். நளினி பரோல் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றார் அமைச்சர் சி.வி.சண்முகம்.