மதுரை: மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தராக செல்லத்துரை நியமனம் செய்யப்பட்டதில் தங்களுக்கு நிர்பந்தம் இருந்ததாக, தேர்வுக்குழு உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தராக செல்லத்துரை என்பவர் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் இவர் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் இல்லாதவர் என்றும், அவர் மீது குற்ற வழக்குகள் உள்ளன என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர்கள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர் சார்பில் ஆவணங்கள் சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில் மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தராக செல்லத்துரை நியமனம் செய்யப்பட்டதில், தங்களுக்கு நிர்பந்தம் அளிக்கப்பட்டதாக, தேர்வுக்குழு உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்
இதனையொட்டி இந்த விவகாரம் தொடர்பாக துணைவேந்தர் செல்லத்துரை, உயர்கல்வித் துறை செயலாளர் மற்றும் தேர்வுகுழு ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.