உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு அக்டோபரில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உரிய காலக்கெடுவுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு உள்பட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் இருந்து வந்தது.
இவ்வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநிலத் தேர்தல் ஆணையத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர், சீலிட்ட உறையில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதைப் பார்வையிட்ட நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வரும் போது, உத்தேச கால அட்டவணைப் பட்டியலை ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாநிலத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com