அரசு வழங்கும் இலவசப் பொருள்கள் வேண்டாம் எனக் கூறி, குடிமைப் பொருள் வழங்கல் துறையில் தங்களது குடும்ப அட்டைகளை புதுவையில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அரசின் இலவசப் பொருள்கள் கிடைக்க வேண்டும், ஆண்டு வருவாய் ரூ.ஒரு லட்சத்துக்கும் மேல் உள்ளோருக்கு குடும்ப அட்டை கிடையாது என பல்வேறு நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்திலும் இலவசப் பொருள்கள் ஏழை, எளியோருக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். வசதி படைத்தோர் தங்களது குடும்ப அட்டைகளை ஒப்படைத்து, இலவசங்கள் வேண்டாம் என விட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதன்அடிப்படையில், பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சங்கர், செல்வகணபதி ஆகியோர் தங்களது குடும்ப அட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் பிரியதர்ஷினியிடம் ஒப்படைத்தனர்.
கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவர் சிவானந்தம், நிர்வாகிகள் மெளலிதேவன், சோழராஜன், லெனின், விஜயலட்சுமி, ஜெயந்தி, லதா, கனகவள்ளி, விஜயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் தங்களது குடும்ப அட்டைகளை ஒப்படைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.