தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மதுரை மாவட்டம் தோப்பூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்த இடங்களை மத்திய அரசுக் குழு கடந்த ஏப்ரல் மாதம் பார்வையிட்டது.
இந்த 5 இடங்கள் குறித்தும் கூடுதல் தகவல்களை கேட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. அந்த தகவல்களும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தை மத்திய அரசுதான் முடிவு செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக துணைக் குழு செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர் 5 இடங்களையும் மீண்டும் ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது. 5 இடங்களில் உள்ள வசதிகள் தொடர்பாக மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்து, தொழில்நுட்பக் குழுவினரிடம் வழங்குவர். அதன்பின்னரே, இடம் தேர்வு செய்யப்படும். இதற்கு கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க எவ்வளவு காலம் ஆகும் என கேள்வி எழுப்பினர். அதற்கு, கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வழக்குரைஞர் பதிலளித்தார். இதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தைத் தேர்வு செய்து அறிவிக்க சரியாக எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்து, மத்திய அரசிடம் தகவல் பெற்று பிற்பகல் 2:15-மணிக்கு நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர்.
பின்னர், பிற்பகலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசிடம் இருந்து பெற்ற தகவல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை 2 மாதத்தில் அறிவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, நீதிபதிகள் ஏற்கெனவே மத்திய அரசின் குழு 5 இடங்களையும் பார்வையிட்டு 3 ஆண்டுகளாகிவிட்டன. இது மக்களின் சுகாதாரம் தொடர்பானது. இதில் மேலும் காலதாமதம் கூடாது. எனவே, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை டிசம்பர் 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
2018 புத்தாண்டு தினத்தில் தமிழக மக்களுக்கு அது நல்ல செய்தியாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com