சென்னை: நேரில் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனைத் தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் விஜயபாஸ்கர். இவரது சென்னை மட்டும் புதுக்கோட்டை இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் கடந்த மார்ச் 7-ஆம் தேதியன்று வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் கிடைத்தன.
அதன் தொடர்ச்சியாக அவர் நான்கு முறை நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். இந்நிலையில் இன்று மீண்டும் அவருக்கு வருமானவரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதனை அடுத்து இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முறை அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அவருக்கும் சர்ச்சைக்குரிய பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டிக்கும் இடையிலான பண பரிமாற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்படலாம் என்று தெரிகிறது.