தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் குலதெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிட வியாழக்கிழமை வந்த நடிகர் தனுஷ் குடும்பத்தினருக்காக கொண்டு வரப்பட்ட கேரவன் வாகனத்திற்கு முறைகேடாக மின்சாரம் எடுத்ததாகக் கூறி, மின் வாரியத்தினர் ரூ. 15,731 அபராதம் விதித்தனர்.
நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ், தேனி மாவட்டத்திற்கு புதன்கிழமை வந்தார். போடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் குடும்பங்களுக்கு நல உதவிகளை அவர் வழங்கினார். தொடர்ந்து, வியாழக்கிழமை ஆண்டிபட்டி, முத்துரெங்காபுரத்தில் உள்ள தனது குல தெய்வத்தின் கோயிலான கஸ்தூரி அங்கம்மாள் கோயிலில் வழிபாடு செய்ய தனது தாய், தந்தை மற்றும் மனைவி ஐஸ்வர்யா ஆகியோருடன் காரில் வந்தார் நடிகர் தனுஷ்.
இந்நிலையில், அவரது குடும்பத்தினர் ஒய்வெடுப்பதற்காக கேரவன் வாகனம் ஒன்று அவர்கள் வருவதற்கு முன்னர் ஆண்டிபட்டிக்கு வந்துள்ளது. இந்த வேனில் உள்ள குளிர்சாதன இயந்திரத்திற்காக, அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து முறைகேடாக மின்சாரம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை அருகில் இருந்தவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால், இதை அலட்சியம் செய்துவிட்டு, தொடர்ந்து மின்சாரம் எடுத்துள்ளனர். இதையடுத்து, மின்வாரியத்திற்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, கேரவன் வாகனத்தை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர். பின்னர் முறைகேடாக கேரவன் வாகனத்திற்கு மின்சாரம் எடுத்ததாகக் கூறி, ரூ. 15,731 அபராதம் விதித்தனர். இந்த தொகையை கட்டிய பின்னரே வாகனம் விடுவிக்கப்பட்டது.