நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு மட்டும் விலக்குப் பெற முயற்சிப்பதற்கு சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் ஆலோசனையின் அடிப்படையில், தமிழகத்திலுள்ள அரசு மருத்துவ இடங்களுக்கு ஓராண்டுக்கு மட்டும் நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்காக தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வர முயல்வதாகத் தெரிகிறது.
இது மாநில அரசின் உரிமைகளை நிரந்தரமாக விட்டுக் கொடுக்கும் செயலாகும். இது கண்டனத்துக்குரியது.
தமிழக அரசின் ஒதுக்கீட்டு வரம்புக்குள் வரக்கூடிய இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாகளுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் அமையும் மாணவர் சேர்க்கையில் மாணவர்களுக்கு 'கட்- ஆஃப்' மதிப்பெண் சிறிய அளவில் குறைந்தால் கூட அவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. எனவே, நீட் தேர்விலிருந்து நிரத்தர விலக்கைப் பெற்று, அடுத்த ஆண்டு முதல், தமிழக அரசே மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.