ஸ்ரீபெரும்புதூர்: டிடிவி. தினகரன் அறிவித்த பதவிக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பழனி தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு அரசியல் நடவடிக்கைகளில் களம் இறங்கியுள்ள அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கட்சிப் பொறுப்புகள் தொடர்பாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தனது ஆதரவாளர்களாகவும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் உள்ள 19 பேருக்கு கட்சிப் பொறுப்புகளை டிடிவி தினகரன் அளித்துள்ளார்.
அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், நேற்று புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.
அவர் அளித்த பதவியை பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் ஏற்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனியும் தனக்கும், டிடிவி. தினகரன் அறிவித்த பதவிக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
தினகரன் அறிவித்த புதிய நிர்வாகிகள் பட்டியில் இடம் பெற்றவர்கள் தங்களுக்கும் டிடிவி. தினகரனின் அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.