தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் அதன் ஆபத்தை உணராமல் எல்லா காய்ச்சலையும் ஒன்றாக பாவித்து தாங்களாவே மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்வதும்
தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் அதன் ஆபத்தை உணராமல் எல்லா காய்ச்சலையும் ஒன்றாக பாவித்து தாங்களாவே மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்வதும், போதிய சிகிச்சை வசதிகள் இல்லாத தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வதும்தான் உயிர் இழப்புக்கு காரணமாக உள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக கொசுவை கட்டுப்படுத்துவதில் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். டெங்குவை கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறையில் உள்ள உயர் அதிகாரிகள் காட்டும் அக்கறை, அத்துறையில் எல்லா ஊழியர்களிடம் காணப்படவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
தடுப்பு நடவடிக்கைகள் மூலமும் சரியான சிகிச்சைகளின் மூலமும் டெங்கு காய்ச்சல் தடுப்பை சிறப்பாகக் கையாள முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக பருவமழைக் காலத்தில் பரவும் தொற்றுநோய்கள் என்ற நிலை மாறி அனைத்து காலங்களிலும் தொற்றுநோய்கள் பரவி வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை டெங்கு, சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள்தான் ஆண்டுதோறும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நிகழாண்டில் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
ஜூலை 30}ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 5,474 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2012}ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. 2012}ஆம் ஆண்டு 12,826 பேர் பாதிக்கப்பட்டு 66 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து 2013}ஆம் ஆண்டில் 6,122 பேரும் 2014}இல் 2,804 பேரும், 2015}இல் 4,535 பேரும் 2016}இல் 2,531 பேரும் பாதிக்கப்பட்டனர். நிகழாண்டில் 7 மாதங்கள் முடிவிலேயே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. வடகிழக்கு பருவமழைக் காலத்தின்போது பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏடிஸ் கொசுக்கள்: டெங்கு என்பது ஒரு வைரஸ் நோயாகும். ஏடிஸ் எனப்படும் நல்ல நீரில் உற்பத்தியாகும் கொசுவினால் இந்த வைரஸ் பரவுகிறது. ஏடிஸ் வகைக் கொசுக்கள் ஒருவரைக் கடித்த 5 அல்லது 6 நாளிலிருந்து நோய் பாதிக்கத் தொடங்கும். இந்தக் கொசுக்கள் கருப்பு நிறத்தில் காணப்படும். அதன் உடலில் வெள்ளைக் கோடுகள் இருக்கும். சுமார் 5 மி.மீ. அளவில் இருக்கும். டெங்குவைப் பரப்பும் வைரûஸ இந்த ஏடிஸ் கொசுக்கள் தங்கள் உடலில் வளர்க்க 7 முதல் 8 நாள்கள் ஆகும்.
ஏடிஸ் கொசுக்கள் நல்ல நீரில்தான் இனப்பெருக்கம் செய்யும். ஒருமுறை ஏடிஸ் கொசு, நல்ல நீரில் முட்டையிட்டு, முட்டையிட்ட இடத்தில் நீர் வற்றிவிட்டாலும் அது அந்த இடத்திலேயே ஒட்டிக் கொண்டு இருக்கும். ஓராண்டுகள் கழித்து அதே இடத்தில் நீர் தேங்கினால் கூட, அந்த முட்டை பொறித்து கொசுவாக வெளியே வரும். இவை பெரும்பாலும் பகல் நேரங்களிலேயே இந்தக் கொசுகள் கடிக்கும். வீட்டில் உள்ள அறைகளின் மூலைகளில், மரச்சாமான்களில் அடியில், வீடுகளில் போடப்பட்டுள்ள ஆடைகள் உள்ளிட்டப் பொருள்களில் தங்கியிருக்கும்.
3 விதமான டெங்கு: இந்தக் கொசுவினால் மூன்று விதமான டெங்கு காய்ச்சல் பரவுகிறது. முதலாவது சாதாரண டெங்கு காய்ச்சல். இதன் அறிகுறிகள் அதிகக் காய்ச்சல், முன்தலை வலி, கண்களுக்கு பின்னால் வலி, தசை மற்றும் மூட்டுகளில் வலி, பசியின்மை, தோலில் அரிப்பு, சோர்வு, வாந்தி ஆகும். அடுத்ததாக டெங்கு ரத்தப்போக்கு காய்ச்சல் . இதற்கும் சாதாரண டெங்கு காய்ச்சலைப் போன்ற அறிகுறி ஏற்படும். மேலும் தொடர்ந்து தீவிர வயிற்று வலி, தோல் வெளிறிய நிறத்தில் காணப்படுதல், சளி, மூக்கு, வாய், பல் ஈறுகளில் ரத்தக்கசிவு, தொடர்ச்சியான வாந்தி, வாந்தி மற்றும் மலத்தில் ரத்தக் கசிவு, தூக்கமின்மை, அதிக தாகமாகவும் வாய் உலர்வாகவும் காணப்படுதல், மூச்சுத்திணறல், நாடித்துடிப்பு பலவீனமாகக் காணப்படுதல் ஆகும். மூன்றாவது வகை டெங்கு "ஷாக் சின்ட்ரோம்' என்று அழைக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலிலேயே கடுமையானது இந்த வகைக் காய்ச்சல்தான். இந்த வகையானது 10 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளை எளிதில் தாக்கும். ரத்தப்போக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகளே இதில் காணும். உடலில் உள்ள நீர்ச்சத்து அனைத்தும் வெளியேறிய நிலையில், உடலில் உள்ள அனைத்து முக்கிய உறுப்புகளிலும் ஒரு அதிர்வு ஏற்பட்டதைப் போன்ற நிலை ஏற்படும்.
ஆரம்பத்திலேயே சிகிச்சை: காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டவுடன் சுய மருத்துவத்தில் ஈடுபடாமல் உடனடியாக மருத்துவமனைகளை அணுக வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் இதனை எளிதில் குணப்படுத்த முடியும். மேலும் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை தரமுள்ள பரிசோதனை மையங்களிலேயே மேற்கொள்ள வேண்டும். "எலைசா' முறையில் பரிசோதனை செய்வதே சிறந்தது. தமிழகம் முழுவதும் 90 பரிசோதனை மையங்களுக்கு எலைசா பரிசோதனை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகையான சிகிச்சைகளும் உள்ளன. மருந்து, மாத்திரைகள், தட்டணுக்கள், அனைத்து வகை ரத்தப் பிரிவுகள் உள்ளிட்டவை போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
மேலும் போதிய சிகிச்சை வசதிகள் இல்லாத தனியார் மருத்துவமனைகள் டெங்கு உள்ளிட்ட எந்தக் காய்ச்சல் நோயாளிகளையும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பே சிறந்தது: நோய் வந்த பின்பு சிகிச்சைக்குச் செல்வதற்கு முன்பே, அதனைத் தடுப்பதே சிறந்தது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்தால் இந்தப் பாதிப்பில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும்.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது: தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. தென்மாவட்டங்களாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து வருகிறது.
சுற்றுப்புறங்களை தூய்மையாக வைப்பதன் மூலம் டெங்கு பரவாமல் தடுக்க முடியும் என்ற தகவலை பொது மக்களிடம் கொண்டு செல்வதற்காக பள்ளி குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களை அந்தந்தப் பகுதிகளுக்குச் சென்று தகவல்களை எடுத்துரைக்க அறிவுறுத்தியுள்ளோம். இதன் மூலம் சுமார் 2 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நல்ல விளைவும் ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுப்புறங்களை நீர் தேங்கும் வகையில் அசுத்தமாகப் பராமரிக்கும் நிறுவனங்கள், வீடுகள், கட்டுமானப் பணியிடங்கள், காலி மனைகள் ஆகியவற்றை உள்ளாட்சி அதிகாரிகள் கண்காணித்து உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கின்றனர் என்றார் அவர்.

தடுப்புக்கு நிலவேம்பு குடிநீர்!

டெங்கு உள்ளிட்ட அனைத்து வகை காய்ச்சல்களுக்கும் சித்த மருத்துவத்தின் நிலவேம்பு குடிநீர் சிறந்த தடுப்பு மருந்தாகச் செயல்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு சித்த மருத்துவர் அலுவலர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மருத்துவர் தமிழ்க்கனி கூறியது:
காய்ச்சல் தடுப்புக்காக இதனைப் பருக விரும்பும் 12 வயதுக்கு மேற்பட்டோர் 50 கிராம் நிலவேம்பு பொடிக்கு 200 மி.லி. தண்ணீர் விட்டு அது 50 மி.லி.யாக வற்றும் வரை கொதிக்க வைத்துப் பருக வேண்டும். 5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 5 கிராம் பொடியில் 120 மி.லி. தண்ணீர் விட்டு 30 மி.லி.யாக வற்ற வைத்துப் பருக வேண்டும். 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 5 கிராம் பொடியில் 100 மி.லி. தண்ணீர் விட்டு 20 மி.லி.யாக வற்றும் வரை கொதிக்க வைத்துக் கொடுக்க வேண்டும். பிறந்த குழந்தைகள் முதல் 2 வயது குழந்தைகள் வரை சித்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கொடுக்க வேண்டும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 5 நாள்களுக்கு இதனைப் பருக வேண்டும். நிலவேம்பு குடிநீரைத் தயாரித்து 3 மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். நேரம் கடந்து விட்டால் அதனை பருகுவதோ, சூடுபடுத்திக் குடிக்கவோ கூடாது.
அல்சர், சித்த மருத்துவத்தின்படி பித்தம் காணப்படுபவர்கள் வெறும் வயிற்றில் இதனைப் பருகக் கூடாது. நிலவேம்பு குடிநீரை பருக விரும்புவோர் சித்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே சிறந்தது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com