ஆந்திர கடலோரத்தை ஒட்டி கன்னியாகுமரி வரை நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை நீடித்தாலும், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 50 மி.மீ., திருப்பூர், மன்னார்குடி 30 மி.மீ., அறந்தாங்கி, நாகப்பட்டினம், ஓமலூர், புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூர், ஆரணியில் 20 மீ.மீ., சென்னை, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, தேனி மாட்டம் பெரியாறு, கோவை மாவட்டம் சின்னக் கல்லாறு, மேட்டுப்பாளையம், வால்பாறை, திருவண்ணாமலை மாவட்டம் போளூர், செய்யாறு உள்ளிட்ட இடங்களில் 10 மீ.மீ. மழையும் பெய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: வடக்கு ஆந்திர கடலோரத்தையொட்டி கன்னியாகுமரி வரை நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. மேலும் கர்நாடகம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பகுதிகளில் காற்றில் மேலடுக்குச் சுழற்சி நிலவி வருகிறது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இருப்பினும் கனமழைக்கு வாய்ப்பில்லை.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.