பள்ளிக் கல்வி: அமைச்சருடன் விவாதிக்கத் தயார்: அன்புமணி ராமதாஸ்

பள்ளிக் கல்வி: அமைச்சருடன் விவாதிக்கத் தயார்: அன்புமணி ராமதாஸ்

பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையனுடன் நேரடியாக விவாதிக்கத் தயாராக இருப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையனுடன் நேரடியாக விவாதிக்கத் தயாராக இருப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிடுபவர்கள், அது குறித்துத் தம்முடன் பொதுமேடையில் விவாதம் நடத்தத் தயாரா என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அவரது துணிச்சலைப் பாராட்டுகிறேன்.
பள்ளிக் கல்வித் துறைச் செயலராக உதயச்சந்திரன் நியமனத்துக்குப் பிறகுதான் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் பாமகவால் முன்மொழியப்பட்டவை என்பதால் அதற்காக பாமக பாராட்டுத் தெரிவித்தது. இந்தச் சீர்திருத்தங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த ஒத்துழைப்பையும் வரவேற்றோம். ஆனால், தொடக்கத்தில் சில மாதங்கள் பள்ளிக் கல்வித் துறை நேர்மையாகச் செயல்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் அண்மையில் தரம் உயர்த்தப்பட்டன. இதையடுத்து இப்பள்ளிகளுக்கு புதிதாக அனுமதிக்கப்பட்ட 900 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், 100 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், 750 பட்டதாரி ஆசிரியர்கள், 150 உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் என 1900 பணியிடங்கள், ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் 900 தலைமையாசிரியர் பணியிடங்கள், புதிதாக ஏற்படுத்தப்பட்ட 150 தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் என 2950 ஆசிரியர் பணியிடங்களை இடமாறுதல் கலந்தாய்வு நடத்தி தானே நிரப்பியிருக்க வேண்டும். அதை விடுத்து கலந்தாய்வு நடத்தாமல் நிர்வாக இடமாறுதல் என்ற பெயரில் ஆணை வழங்கி விதியை மீறியுள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அந்த மாவட்டத்துக்குள் மட்டும் தான் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய அதிகாரம் இருந்த நிலையில், அவர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்கு இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்திலும் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கவில்லை.
பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் பற்றி அண்மைக் காலங்களில் பாமக முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுஉறுதி செய்கிறேன். செங்கோட்டையனின் அறைகூவலை ஏற்று அவருடன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அனைத்து ஊடகங்கள் முன்னிலையில் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன்.
விவாதத்தை மக்கள் நேரடியாகப் பார்த்து மதிப்பீடு செய்துகொள்ள வசதியாக விவாதம் செய்தித் தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்பட வேண்டும் என்பது மட்டும் தான் எனது நிபந்தனை. இதை ஏற்றுக் கொண்டு விவாதம் நடத்துவதற்கான இடம் மற்றும் தேதியை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com