சென்னை: திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் நிச்சயமாக அரசியலுக்கு வருவார். நிச்சயம் ஆட்சியைப் பிடிப்பார் என்று காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. சிலர் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், சிலர் எதிர்க்கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழருவி மணியன், ஆமாம், ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார். சந்தேகத்துக்கு இடமின்றி, ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார்.
அதேப்போல, எந்த சந்தேகமும் இல்லாமல் ரஜினி காந்த் ஆட்சியைக் கைப்பற்றுவார். அவருடன் அரசியல் மற்றும் சமூக பிரச்னைகள் குறித்து ஆலோசித்தேன். அப்போது, அவர் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து உறுதி செய்துள்ளார்.
அதே சமயம், அவர் அரசியலில் நுழைவது மக்களுக்கு சேவையாற்றவே தானே தவிர, ஊழல் செய்து பணம் சம்பாதிக்க அல்ல என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.