சென்னை: தமிழகமெங்கும் நடைபெறும் சிலை கடத்தலை தடுக்க ஆகஸ்ட் 24-க்குள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் சிறப்புக் குழு அமைக்க வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சிலை கடத்தலில் தற்போது பணியில் உள்ள காவலர்கள் காதர் பாஷா, சுப்புராஜ் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவலர் எழுதிய கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீ திமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், சிலை கடத்தல் குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிலைகளை விற்றுப் பணம் பெற்ற வழக்கில் தொடர்புடைய காவலர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். எனவே, இவர்கள் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை நியமித்து உத்தரவிட்டிருந்தார். மேலும், தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு வழக்குகள் அனைத்தையும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தனது உத்தரவில் விரிவாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஜூலை 21 -ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு முன்பு பதிவான வழக்குகளை மட்டும் சிறப்பு அதிகாரி விசாரிக்க வேண்டுமா அல்லது உத்தரவுக்குப் பின்னர் பதிவாகும் வழக்குகளையும் சிறப்பு அதிகாரிதான் விசாரிக்க வேண்டுமா என்று தமிழக அரசின் சார்பில் கோரப்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க கோரப்பட்டது.
ஆனால், இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஆர்.மகாதேவன், தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை விசாரித்து வருகிறார்.ஆகையால், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருந்து காணொலி காட்சி மூலம் அரசு சார்பில் எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார்.
அப்போது ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞர் மகாராஜன், சிலை கடத்தலில் தொடர்புடைய இந்து சமய அறநிலைய துறையைச் சேர்ந்த காமராஜ், ராமச்சந்திரன், தலைமை எழுத்தர் ராஜா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது 'ஜூலை 21 -ஆம் தேதிக்கு முன்பு சிலைகள் காணாமல் போய் இருந்தாலோ அல்லது சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவைதொடர்பாக புதிதாக வழக்குப்பதிவு செய்தாலோ அந்த வழக்குகள் அனைத்தையும் சிறப்பு அதிகாரி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தான் விசாரிக்க வேண்டும் என்ற நீதிபதி, இந்த வழக்கில் அவ்வப்போது பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்' என்றார். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 10 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழகமெங்கும் நடைபெறும் சிலை கடத்தலை தடுக்க ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது மேலும் ஆகஸ்ட் 24-க்குள் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அப்பொழுது பொன் மாணிக்கவேல் சார்பில், சிலைக் கடத்தல் தடுப்புக்கான சிறப்புக் குழுவின் அலுவலகத்தினை திருச்சிக்குப் பதிலாக தஞ்சையில் அமைக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.