சென்னை: தற்காப்பு அல்ல; தன்மானமே முக்கியம் என்று சென்னையில் இன்று நடைபெற்ற முரசொலி பவழவிழாவில் நடிகர் கமல்ஹாஸன் தெரிவித்துள்ளார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் பவழ விழா கொண்டாட்டங்கள் இன்றும் நாளையும் நடை பெறுகின்றன. முதல் நாளான இன்று கலைவாணர் அரங்கத்தில் தமிழகத்தின் முக்கிய பத்திரிக்கியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:
முரசொலியின் இந்த பவழ விழா நிகழ்வில் கலந்து கொள்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். திரையில் நான் தமிழை கற்க உதவியதில் தொடங்கி நான் கலைஞரின் ரசிகன். நான் வியக்கும் ஆளுமைகளில் மிகுந்த பெருந்தன்மை கொண்டவர் கருணாநிதி. அது இன்று வரை தொடர்கிறது.
மாநிலத்தின் மிக முக்கியமான பத்திரிகைகளின் ஆசிரியர்கள்; தமக்குள் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவர்கள் அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். ஒரு ஆரோக்கியமான பண்பாடு இங்கு நிலவி வருகிறது. இதனை வரலாறு பதிவு செய்துகொள்ளும். இங்கு நான் அமரலாமா என்ற என் தகுதி குறித்து நான் யோசிக்கவே இல்லை. இந்த மன்றத்தில் பத்திரிக்கை ஒன்றைத் துவங்கி அதனை சரியாக நடத்த முடியாத ஒரு பத்திரிகையாளனான நானும் அமரக் கிடைத்த வாய்ப்பினை தவற விடக் கூடாது என்ற பேராசையில் இங்கு வந்திருக்கிறேன்.
இந்த மேடையில் அரசியல் பேசாமல் இருக்க கூடாது என்பதற்காக..இதில் கலந்து கொள்வதா என்பது குறித்து யோசிக்கும் பொழுது என் நினைவுக்கு தோன்றியது, 'தற்காப்பு அல்ல; தன்மானம்தான் முக்கியம்' என்பதுதான்.
திராவிடம் என்பது இங்கு மட்டும் உரியது அல்ல; அது இந்தியா முழுமைக்குமானது. சிந்து சமவெளி நாகரீகத்தில் தோன்றிய அது தற்பொழுது தமிழகத்தில் படிந்திருக்கிறது. நமது தேசிய கீதத்தில் திராவிடம் என்ற வார்தை இருக்கும் வரை அது இங்கு நிலைத்திருக்கும். நாம் இருக்கும்மட்டும் அது இருக்கும்.
நான் ஓட்டுக்கு கணக்கினை சொல்லவில்லை; மக்களின் வலிமையைச் சொல்கிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.