திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில், மீண்டும் வெள்ளிக்கிழமை முதல் இயங்கத் தொடங்கியது.
திருச்சியில் தினமும் காலை 10 மணிக்குப் புறப்படும் பயணிகள் ரயில், காரைக்காலுக்கு பிற்பகல் 2.30 மணிக்கு வந்துவிட்டு 2.45 மணிக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி நீட்டிப்பு செய்யாமல் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
இந்த நிலையில், திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகமானது நிறுத்தப்பட்ட ரயில் மீண்டும் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படும் என அறிவிப்பு செய்தது.
இதன்படி திருச்சியிலிருந்து காரைக்காலுக்கு பிற்பகல் 2.30 மணிக்கு வந்து சேர்ந்த பயணிகள் ரயில், 2.45 மணிக்கு திருச்சி புறப்பட்டுச் சென்றது.
போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்ட இந்த ரயில் அடுத்த 6 மாதங்களுக்கு இயக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. ரயில் காரைக்காலில் இருந்து புறப்படும் நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட ரயில் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் வி.ஆர்.தனசீலன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.