தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறும் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் மீண்டும் வலியுறுத்தியதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பதவியேற்ற விழா, குடியரசுத் தலைவர் மாளிகை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பழனிசாமி, பின்னர் பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அவருடன் மக்களவைத் துணைத் தலைவர் எம்.தம்பிதுரை, தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, பிரதமரிடம் 'நீட்' தேர்வு விலக்கு உள்ளிட்ட தமிழகம் நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து முதல்வர் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் கோரிக்கை மனுவையும் அளித்தார்.
பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்பிய முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம்:
பிரதமர் மோடியைச் சந்தித்து, 'நீட் ' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினேன். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதே நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள 'நீட்' தேர்வு மசோதா நிலுவையில் உள்ளது. பிரதமரைச் சந்தித்து அதற்கு வடிவம் கொடுத்து தமிழகத்தை நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 'நீட்' தேர்வு குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து எனக்குத் தெரியாது. அது குறித்து ழுழுமையாகத் தெரிந்த பிறகே இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.