எஸ்டேட் சாலையில் சென்ற வனத் துறை வாகனத்தை விரட்டி வந்த யானை அதன் கண்ணாடியைச் சேதப்படுத்தியது.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த ஊசிமலை எஸ்டேட் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக ஒரு யானை நடமாடி வருகிறது. குடியிருப்புப் பகுதியில் இருக்கும் வாழைகளை சாப்பிடுவதற்காக மாலை நேரத்தில் வரும் அந்த யானையை அப்பகுதி மக்கள் கற்கள் எறிந்தும், தீப்பந்தங்கள் கொளுத்தியும் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபடுவதால், சில சமயங்களில் ஆக்ரோஷமடையும் யானை, குடியிருப்புளை முட்டித் தள்ளி சேதப்படுத்துகிறது. இதனால், அப்பகுதியில் சில தினங்களாக வனத் துறையினர் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், மீண்டும் எஸ்டேட் பகுதிக்கு சனிக்கிழமை காலை யானை வந்திருப்பதை அறிந்து, வனத் துறையின் மனித } வன உயிரின மோதல் தடுப்புக் குழுவினர் காலை 7 மணிக்கு வேனில் அங்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, எதிரே வந்த அந்த யானை, வாகனத்தை நோக்கி ஓடிவந்து, கண்ணாடியை முட்டிச் சேதப்படுத்தியது. இதையடுத்து, வாகனத்தில் இருந்த ஒலிபெருக்கி மூலமாக சப்தம் ஏற்படுத்தி யானையை அப்பகுதியில் இருந்து விரட்டியுள்ளனர்.