சென்னை தாம்பரத்தில் பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தாளாளர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
மேற்கு மாம்பலம் வீராசாமி தெருவைச் சேர்ந்தவர் ரவி (45). இவர் கிழக்கு தாம்பரத்தில் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். அந்தப் பள்ளியின் தாளாளராகவும் செயல்படுகிறார்.
இந்த நிலையில், அந்தப் பள்ளியில் பணிபுரியும் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த 27 வயது ஆசிரியைக்கு பல்வேறு வகைகளில் ரவி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம். ரவியின் தொந்தரவு தாங்க இயலாத அந்த ஆசிரியை, இரு மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து விலகிவிட்டார்.
இந்த நிலையில், அந்த ஆசிரியை, தான் வேலைக்குச் சேரும்போது கொடுத்த தனது அசல் சான்றிதழ்களைப் பெறுவதற்கு பள்ளிக்கு வெள்ளிக்கிழமை சென்றார். அப்போது, தனது அறைக்கு ஆசிரியை வரவழைத்த ரவி, தனது ஆசைக்கு இணங்குமாறு ஆசிரியை மிரட்டியதாகவும், ஆசைக்கு இணங்கவில்லை என்றால் சான்றிதழை தர முடியாது எனவும், மேலும் அவர் மீது அவதூறு பரப்புவேன் எனவும் கூறினாராம்.
இதுகுறித்து அந்த ஆசிரியை, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து போலீஸார் ரவியை சனிக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.