அதிமுகவில் நிலவும் உள்கட்சிப் பிரச்னையால் ஆட்சி நிர்வாகம் முடங்கிப் போயுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: தோல்வி பயத்தின் காரணமாக தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயங்குகிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், தேர்தலை நடத்த மறுத்து வருகிறது.
அதிமுக அணிகளுக்கு இடையே நடைபெறும் உள்கட்சிப் பிரச்னையால் ஆட்சி நிர்வாகம் முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது.
நீட் தேர்வு, விவசாயிகள் விவகாரம், வறட்சி, டெங்கு பிரச்னைகளுக்குத் தீர்வு காண அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய அரசும் தமிழகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாமல் இருந்து வருகிறது.
தமிழக முதல்வர், அமைச்சர்கள் தில்லி சென்று பிரதமரைச் சந்திக்கின்றனர். ஆனால், தமிழகப் பிரச்னை குறித்து எதுவும் பேசுவது இல்லை. அதிமுக இணைப்புக்கான பஞ்சாயத்துதான் தில்லியில் நடந்து வருகிறது.
ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளைக் கலைத்துவிட்டு, அங்கு ஆட்சியை அமைக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இது ஜனநாயக விரோதம். சட்ட விரோதம் என்றார்.