தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் மேலும் தாமதம் ஏற்படாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை, அமைச்சர் விஜயபாஸ்கர் சனிக்கிழமை சந்தித்து, அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள், சிகிச்சைக்கான வசதிகள் உள்ளிட்டவை குறித்து சுமார் 2 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பான அறிவிப்பு இரண்டு நாள்களில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கையை மேலும் தாமதிக்காமல் உடனடியாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 90 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த தகவல் ஏடு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சக் விஜயபாஸ்கர்.