ஒரே கிராமத்தில் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருத்தணி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்த எம்.பி., கோ.அரி.
திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்த எம்.பி., கோ.அரி.

திருத்தணி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு வட்டத்தில், கடந்த சில வாரங்களாக டெங்கு, வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருத்தணி அருகே உள்ள சரஸ்வதி நகரில் சனிக்கிழமை 30}க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்பட்டது. அவர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் வீடுதோறும் சென்று, குடிநீர் தொட்டிகளில் சோதனையிட்டும், கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில், எம்.பி., கோ.அரி, எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் ஆகியோர், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வந்து, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சனிக்கிழமை பார்வையிட்டனர். பின்னர், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.
சரஸ்வதி நகர், திருத்தணி அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் பிரபாகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பருவ நிலை மாற்றத்தால் சாதாரணமாக காய்ச்சல் வரும். மாவட்ட முழுவதும் சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 1,110 தாற்காலிகப் பணியாளர்கள் மூலம் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 58 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்களில், 52 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 6 பேர் மட்டும் சென்னை அரசு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஊரக வளர்ச்சி துறை சார்பில் வாரந்தோறும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் கிராமங்களில் தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் தங்களது பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இந்த ஆய்வின்போது, திருவள்ளூர் } காஞ்சிபுரம் மாவட்ட ஆவின்பால் தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com