கொடைரோடு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது ஞாயிற்றுக்கிழமை கார் மோதியதில், கணவன், மனைவி உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள சூலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரபாண்டி(38). இவரது மனைவி முத்துலட்சுமி (32). இவர்களுக்கு ரோஹித் (10) மற்றும் கீர்த்தனா (8) என 2 குழந்தைகள் உள்ளனர். திருப்பூர் செல்லம் நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சௌந்தரபாண்டி, சொந்தமாக கார் ஓட்டி வந்தார்.
இந்நிலையில், எழுமலை அடுத்துள்ள தனது சொந்த கிராமத்துக்குச் செல்வதற்காக, சௌந்தரபாண்டி தனது குடும்பத்தினருடன் ஆம்னி வேனில் சனிக்கிழமை இரவு புறப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அடுத்துள்ள கொழிஞ்சிப்பட்டி பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில், பின்னால் வந்த காரும் ஆம்னி வேன் மீது மோதியது.
இதில், சரக்கு லாரி மற்றும் காருக்கு இடையில் சிக்கிய ஆம்னி வேன் பலத்த சேதமடைந்தது. இதனால் பலத்த காயமடைந்த முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய சௌந்தரபாண்டி, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். குழந்தைகள் கீர்த்தனா, ரோஹித் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து, அம்மையநாயக்கனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.