கன்னியாகுமரி அருகே எஞ்சின் பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸôர் சனிக்கிழமை மீட்டனர்.
கன்னியாகுமரியை அடுத்த கீழமணக்குடியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் (37). இவருக்குச் சொந்தமான வள்ளத்தில் இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மரியஜாண் (60), போஸ்கோ (63), சூசை (45), பிராங்களின் (52) ஆகிய 5 பேரும் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கீழமணக்குடியில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 3 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வள்ளத்தில் எஞ்சின் பழுதடைந்தது. கடலில் காற்று அதிகமாக இருந்ததால் மீனவர்கள் 3 மணிநேரமாக கடலுக்குள் தத்தளித்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளர் நவீன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர்கள் கோபி, மணிகண்டன், மகாலிங்கம் ஆகியோர் ரோந்துப் படகில் சென்று மீனவர்களை மீட்டு சின்னமுட்டம் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.