சென்னை ராஜாஜி சாலையில் நடைபெறும் சுதந்திர தின விழாப் பேரணியில் முதல் முறையாக ஆந்திரத்தைச் சேர்ந்த 80 காவலர்கள் அணிவகுக்க உள்ளனர்.
கடந்த சில நாள்களாக நடைபெறும் விழா ஒத்திகை நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
அண்டை மாநிலங்களுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்பதன் அடிப்படையில் சுதந்திர தின விழாவின் போது ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் பேரணியில் பிற மாநிலத்தைச் சேர்ந்த காவலர்கள் பங்கேற்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. மாநிலங்களுக்கு இடையே காவலர்கள் பரிமாற்றம் என்பதன் அடிப்படையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம்-ஆந்திரம்: மத்திய அரசின் உத்தரவுப்படி, தமிழகத்தில் இருந்து 80 காவலர்கள் ஆந்திரத்துக்கும், ஆந்திரத்தைச் சேர்ந்த 80 காவலர்கள் தமிழகத்துக்கும் வந்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த சிறப்புப் படையினர் கடந்த 10 நாள்களுக்கு முன் ஆந்திரம் சென்றனர். இதேபோன்று, தமிழகத்துக்கு ஆந்திரத்தைச் சேர்ந்த 80 காவலர்கள் வந்துள்ளனர். அவர்கள் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழா ஒத்திகையில் பங்கேற்றனர். வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழா பேரணியில் ஆந்திர காவல் துறையினர் தனியாக அணிவகுத்து வரவுள்ளனர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக இத்தகைய நடைமுறை சுதந்திர தினத்தின்போது நாடு முழுவதும் பின்பற்றப்படுகிறது. இந்த அடிப்படையில் தமிழகத்திலும் முதல் முறையாக சுதந்திர தின அணிவகுப்பில் வெளி மாநிலக் காவலர்கள் அணிவகுத்து வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.