தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்படவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற மதிமுக வழக்குரைஞர்கள் அணி கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயித்துக்கொள்ள வழங்கப்பட்டுள்ள முடிவு பொதுமக்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதம் ஆகிவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ள நிலையில் 6.5 சதவிகித வளர்ச்சியே அடையவில்லை என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் மத்திய அரசுத் திட்டங்கள் உள்ளது.
தமிழக அரசியலில் வெற்றிடம் என்று ஏதுமில்லை. அந்த வார்த்தை மாயை. அதிமுக, திமுக இரு கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளதே தவிர பலவீனமாக இல்லை. இரு கட்சிகளுக்குமே தனித்தனி வாக்கு வங்கிகள் உள்ளன. ஆனால், இரு கட்சிகளையும் புறக்கணித்தவர்கள் நாங்கள். மதிமுக நடவடிக்கை மீது நம்பிக்கை உள்ளது.
மக்களின் பார்வை எங்கள் பக்கம் திரும்பியுள்ளது. தமிழகத்தில் திராவிட இயக்கத்தை அழிக்கவோ அகற்றவோ முடியாது. தமிழக அமைச்சரவையை ஆட்டுவிக்க நினைக்கிறது மத்திய அரசு. பாஜக, கங்கை நதியை விட்டு காவிரி பொன்னி நதிக்கரைகளில் கால் பதிக்க முடியாது என்றார் அவர்.